தேசியத் தலைவரை விமர்சிக்க விக்னேஸ்வரனுக்கு அருகதையில்லை: யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை கண்டனம்!
சாவகச்சேரியில் நடைபெற்ற மே தின நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது உரையில் தமிழீழ தேசியத் தலைவரை சர்வாதிகாரி என்று விமர்சித்தமையை யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை மிக வன்மையான கண்டித்துள்ளது.
தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றியோ தமிழீழ தேசியத் தலைவரைப் பற்றியோ விமர்சிப்பதற்கு விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமோ உரிமையோ இல்லை என்றும் மேற்படி பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் நிலையான, நீடித்த விடுதலைக்காக மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் களமாடிய போது விக்னேஸ்வரன் கொழும்பில் சிங்களவர்களுடன் நட்பு பாராட்டியவர். புலிகள் நீராகாரம் இன்றி உண்ணா நோன்பிருந்து உயிரைத் துறந்த கணங்களில் விக்னேஸ்வரன் பட்டம் பதவிகளுக்காக சிங்களத் தலைமையிடம் மண்டியிட்டிருந்தவர்.
தமிழ் மக்களின் பிள்ளைகள் புலிகளாக மாறி அனைத்து ஆசைகளையும் துறந்து போராடி களங்களில் களப்பலியாகி மாவீரர்களாகிய போது வின்னேஸ்வரன் தனது பிள்ளைகளுக்கு சிங்களவர்களை திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தவர். இறுதி யுத்தத்தின் பின்னர் படைத் தலைமை தென்னிலங்கையில் நடத்திய யுத்த வெற்றிக்கொண்டாட்டங்களின் போது விக்னேஸ்வரன் அங்கு கலந்துகொண்டவர்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகம் பூராகவும் பரந்து விரிந்தபோது, தமிழீழ தேசியத் தலைவரின் ஆற்றல், ஆளுமைகள், போர்த்திறமைகள் போன்றவற்றை உலகம் மெச்சியபோது சிங்களத்தின் செருப்பாக தேய்ந்த விக்னேஸ்வரனுக்கு தேசியத் தலைவரின் பெறுமதி எங்கே தெரியப்போகிறது. தமிழரின் அடையாளத்தை உலக அரங்கில் வெளிப்படுத்திய தேசியத் தலைவரை சர்வாதிகாரி என்று வர்ணிப்பதற்கு விக்னேஸ்வரனுக்கு எந்த அருகதையும் இல்லை.
கொக்கை உருவகப்படுத்துவதற்கு பாலை உதாரணம் காட்டியதைப் போன்று மகிந்தவின் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்த தமிழீழ தேசியத் தலைவரை உதாரணமாகக் காட்டிய விக்னேஸ்வரனின் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தான் முதலமைச்சராக வருவதற்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது தமிழீழ தேசியத் தலைவரை சுதந்திரப் போராட்ட வீரர் என்று முழங்கி மக்களிடம் இரந்து வாக்குப் பிச்சை பெற்ற பின்னர் தற்போது தேசியத் தலைவரை வசை பாடுவதற்கு வின்னேஸ்வரன் முற்பட்டுள்ளமையானது தமிழ் மக்களால் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும்.
தமிழ் இனத்திற்காக தனது குடும்பத்தையும் அர்ப்பணித்த தேசியத் தலைவரையும் அனைத்து ஆசைகளையும் துறந்து களமுனையில் போராடி வீரகாவியமாகிய போராளிகளையும் எவரும் கொச்சைப்படுத்த எந்தவொரு தமிழ் மகனும் இடமளிக்கமாட்டான் என்பதை விக்னேஸ்வரனும் அவரது கூட்டத்தாரும் உணர்ந்துகொள்வது அவசியம்.
உங்கள் அரசியல் காய்நகர்த்தல்களுக்கு புலிகளின் தியாகத்தை விலை பேசாதீர்கள். முடிந்தால் உங்கள் திறமையைப் பயன்படுத்தி அரசியல் செய்யுங்கள். இல்லையேல் வீட்டுக்குச் செல்லுங்கள். இனிமேலும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த நினைத்தால் மக்களாலேயே அடித்து விரட்டப்படக்கூடிய நிலை ஏற்படும்.
தமிழ் மக்கள் பேரவை
யாழ்.மாவட்டம்
02.05.2014
Tag: Sri lanka news Srilanka
